யாழ். வடமராட்சி பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த ஆசிரியை ஒருவருக்கு இன்றைய தினம் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் மருத்துவர் ஆர்.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ். போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் பெறப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் குறித்த தொற்றாளர் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
குறித்த தொற்றாளர் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
இன்று தொற்று உறுதி செய்யப்பட்ட ஆசிரியையின் வீட்டில் அண்மையில் திருகோணமலையில் இருந்து உறவினர்கள் வந்து தங்கியிருந்துள்ளனர்.இவ்வாறு தங்கியிருந்த உறவினர்கள் திருகோணமலைக்கு திரும்பிய நிலையில் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து அவரிடம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட உறவினரது வீட்டிற்கு சென்று திரும்பியமை தெரியவந்தது.
இத்தகவல் பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினருக்கு வழங்கப்பட்டதை அடுத்து, குறித்த ஆசிரியை குடும்பத்துடன் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.
அவர்களிடம் பெறப்பட்ட மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதே ஆசிரியைக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம், பருத்தித்துறை, வடமராட்சி